கற்கை நன்றே! கற்கை நன்றே! பிச்சை புகினும் கற்கை நன்றே!!

Friday 26 March, 2010

மண்வாசனையும் பாரதிராஜாவும் (மகேந்திரன்)


சிலபேருக்கு மட்டும் அவர்களின் பெயருகேற்ற மாதிரி அவர்களின் குணச்சிறப்பும் சாதனையும் ஒன்று போல அமைந்து விடுகிறது. பிற்காலத் தமிழ் சினிமாவில் புதிய களம் கண்டு மாபெரும் வெற்றிவாகை சூடிய ராஜாதான் பாரதிராஜா..

16 வயதினிலே படம் வெளிவரும்வரை சினிமா ஸ்டுடியோக்களில் வரையப்பட்டிருந்த கிராமங்களைத் தான் நம்மால் பார்க்க முடிந்தது. 16 வயதினிலே வந்த பிறகே நிஜகிராமங்களையும், அந்த மக்களையும், அந்த மண்ணின் வாசனையையும் நம்மால் நேருக்குநேர் பார்க்க முடிந்தது. அந்தக் கிராமங்களில் வாழும் ஒருவராக நம்மை நினைத்துக் கொண்டு அவரது திரைப்படங்களைப் பார்த்து மகிழ முடிந்தது. தமிழ்ச் சினிமாவில் பாரதிராஜாவின் வருகைக்குப் பிறகு, தமிழ்த் திரைப்பட உலகமே கிராமங்களை நோக்கி ஓடத் தொடங்கியது. கிராமங்களுக்கு நம்மை அழைத்துச் சென்றது மட்டும் பாரதியின் சாதனை என்று நினைக்க முடியாமல், கதை சொல்லும் நேர்த்தியிலும் புதுமை படைத்தவர் பாரதி. புதுவிதமான திரைக்கதை, நடிகர் தேர்வு, பாடல் எடுக்கும் அழகிய பாங்கு, கதாப்பாத்திரங்களின் யதார்த்தமான பேச்சு, நடைமுறை வாழ்க்கை, அதன் அழகு மொத்தத்தில் தமிழ் சினிமாவை மண்வாசனையுடன் தலை நிமிர வைத்தது இயக்குநர் பாரதிராஜாதான்.

அவர் இயக்குநராக அறிமுகமான 16 வயதினிலே படத்தில் கதாநாயகனை அதுவும் கமலஹாசனை சப்பாணியாக நடிக்க வைத்து, சினிமா ஹீரோ இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அதுவரை இருந்த சினிமா சம்பிரதாயத்தை உடைத்தெறிந்த முதல் இயக்குநரும் பாரதிதான்.

பாரதி, தனது முதல் படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் ஒரு புதிய நதியை ஓட வைத்திட அந்த நதியில் தான் இன்றுவரை எத்தனை இயக்குநர்கள் படகோட்டி வருகிறார்கள்!

கதாநாயகன் என்றால் ஆணழகனாக இருக்க வேண்டும், கட்டுமஸ்தான உடல்வாகு கொண்டவனாய் இருக்க வேண்டும் என்ற வறட்சியான தத்துவத்தையெல்லாம் போட்டு நொறுக்கிப் பொசுக்கியவர் இந்த பாரதி. அவர் இயக்கிய படங்களில் எல்லாம் அவரும் எதிர்பாராத புதுமுகங்களை படத்தின் முக்கிய கேரக்டர்களுக்கு அறிமுகப்படுத்தினார். பிறகு, அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர் நடிகைகள் அனைவரும் தமிழ் சினிமாவில் உச்சகட்டப் புகழைப் பெற்று பிரபலமானார்கள்.

இந்திய சினிமாவிலேயே தனது திரைப்படங்களின் மூலம் கணக்கற்ற புதுமுகங்களை அறிமுகப்படுத்தி வெற்றி பெற்று சாதனை படைத்த ஒரே இயக்குநர் பாரதிராஜாதான் என்று நினைக்கிறேன். பாரதிராஜாவின் ஒரு படத்தில் நடித்தாலே போதும் தனது எதிர்காலம் ஒளிமயமாகி விடும் என்று ஏங்கி நிற்கும் கூட்டம் இன்றும் காத்துக் கொண்டு நிற்கிறது.

அவரது இன்னொரு மாபெரும் சாதனை, அவருடைய உதவியாளர்கள் அனைவரும் இன்று பிரபலமான இயக்குநர்களாக இருக்கிறார்கள். அடுத்த கட்டமாக அவர்களுடைய உதவியாளர்களும் இன்று இயக்குநர்கள், நடிகர்களாகி விட்டார்கள். உதாரணத்திற்கு பாரதிராஜாவின் உதவியாளர்களான பாகியராஜ், மணிவண்ணன் இருவருமே புகழ்பெற்ற இயக்குநர்களாகவும் நடிகர்களாகவும் இருக்கிறார்கள். பாக்யராஜ் அவர்களிடம் உதவியாளர்களாய் இருந்த பார்த்திபன் போன்றவர்கள் நடிகர்கள், இயக்குநர்களாகி விட்டார்கள்.

பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டு முன்னணி நடிகர், நடிகை களானவர்களை தமிழ்நாடே அறியுமென்பதால் அந்த நீ..ள..மான பட்டியலை இங்கே நான் எழுதவில்லை.

பாரதிராஜா படமென்றாலே, புதுமைகளுக்கு பஞ்சம் இருக்காது.. மண்வாசனைக்குத் தட்டுப்பாடு இருக்காது.. மனக்களிப்பிற்குத் தடையிருக்காது என்று மக்கள் ஒரு கல்வெட்டையே உருவாக்கிவிட்டார்கள்.

முதல்மரியாதை படத்தை நான் எத்தனை முறை பார்த்திருக்கிறேன், நடிகர் திலகத்தின் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரம் அதைக்கொண்டு பாரதி கதைப் போக்கு இன்றும் பிரமிக்க வைக்கிறது.

நான் கதை வசனகர்த்தாவாக இருந்தபோது, பாரதி உதவி இயக்குநராக இருந்தார். அப்போதிருந்தே நாங்கள் நண்பர்கள். ஆனால் 16 வயதினிலே வரும்வரை அந்த நண்பனிடம் இப்படியொரு அமானுஷ்யத் திறமை இருந்ததை நான் அறியவில்லை. இன்றும் அனது அருமை நண்பனாகத் திகழும் பாரதிராஜா, கர்வம் இல்லாத வெற்றியாளன். திரைஉலகில் என்றுமே களைத்துச் சளைக்காத ஒரு அபூர்வப் போராளி இந்த பாரதிராஜா!

எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடிய உண்மைக் கலைஞன். பாரதிராஜாவுக்குப் பின், தமிழ் சினிமாவில் இயக்குநராகும் ஆசையில் சென்னைக்கு ஓடிவந்தவர்கள் ஏராளம்.. இயக்குநர் ஆகும் ஆசையை இளைஞர்களிடத்தில் உண்டாக்கிய இயக்குநர் பாரதிராஜா!

பரதிராஜாவின் பாதிப்பால் பலரும் பல இடங்களில் இருந்து புறப்பட்டு வந்து இயக்குநர்கள் ஆனார்கள். அவர்களின் பெயரில் கட்டாயமாக பாரதி என்பதும் ராஜா என்பதும் இரண்டில் ஒன்று நிச்சயம் இடம் பெறும். அந்த அளவிற்குப் புதிய இயக்குநர்களை வசீகரித்தவர் பாரதிராஜா..

இன்றுவரை பாரதிராஜா என்ற அற்புதக்கலைஞன் மண்வாசனை கொண்ட படங்களைத் தருவதில் தனக்கு நிகர் யாரும் இல்லை என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

பாரதிராஜாவிற்கு தமிழ் சினிமாவும், தமிழர் கலாச்சாரமும், தமிழர்களின் பெருமையும் என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறது.

-இயக்குநர் மகேந்திரன்

புத்தகம்: சினிமாவும் நானும்

தயாரிப்பு & வெளியீடு:
மித்ர ஆர்ட்ஸ் & கிரியேஷன்ஸ்
32/9 ஆற்காடு சாலை, கோடம்பாக்கம்
சென்னை-24

.
.

Monday 22 March, 2010

இருபது கட்டளைகள் (வைரமுத்து)

எங்கே ஊர்களில்
ஜாதி இல்லையோ
அங்கே கூவுக சேவல்களே

எங்கே பூமியில்
போர்கள் இல்லையோ
அங்கே பாடுக பூங்குயிலே
``````````````````````````````````````````````

எங்கே மனிதரில்
பேதமில்லையோ
அங்கே முழங்கு சங்கினமே

எங்கே மானுடம்
சிறகு தேடுமோ
அங்கே வழிவிடு வான்வெளியே
``````````````````````````````````````````````

எங்கே குழந்தையின்
கைகள் நீளுமோ
அங்கே ஒளிருக வெண்ணிலவே

எங்கே உனக்கு முன்
மனிதர் விழிப்பரோ
அங்கே தோன்றுக கதிரவனே
``````````````````````````````````````````````

எங்கே விதவையர்
கூந்தல் காயுமோ
அங்கே மலருக பூவினமே

எங்கே பூவினம்
தூங்கி விழிக்குமோ
அங்கே சுற்றுக வண்டினமே
``````````````````````````````````````````````

எங்கே புன்னகை
போலியில்லையோ
அங்கே சிரித்திடு பொன்னிதழே

எங்கே தன்னலம்
அழிந்து போகுமோ
அங்கே நீர்பொழி என்விழியே
``````````````````````````````````````````````

எங்கே வேர்வைகள்
தீர்ந்து போகுமோ
அங்கே மழை கொடு மாமுகிலே

எங்கே ஏழையர்
அடுப்பு தூங்குமோ
அங்கே பற்றுக தீச்சுடரே
``````````````````````````````````````````````

எங்கே கன்றுகள்
மிச்சம் வைக்குமோ
அங்கே சிந்துக கறவைகளே

எங்கே மனிதர்கள்
சைவமாவாரோ
அங்கே பாடுக பறவைகளே
``````````````````````````````````````````````

எங்கே உழைப்பவர்
உயரம் உயருமோ
அங்கே சுழலுக ஆலைகளே

எங்கே விதைத்தவர்
வயிறு குளிருமோ
அங்கே விளைந்திடு நெல்மணியே
``````````````````````````````````````````````

எங்கே கண்களில்
கள்ளமில்லையோ
அங்கே தோன்றுக கனவுகளே

எங்கே உறவுகள்
ஒழுக்கமாகுமோ
அங்கே வில்லெடு மன்மதனே
``````````````````````````````````````````````

எங்கே பயணம்
மீளக்கூடுமோ
அங்கே நீளுக சாலைகளே

எங்கே மண்குடம்
காத்திருக்குமோ
அங்கே பரவுக ஆறுகளே
*************************************************************

-கவிப்பேரரசு வைரமுத்து

புத்தகம்: வைரமுத்து கவிதைகள்
பக்க எண்: 594
.
.

Friday 19 March, 2010

மதுரகவி பாஸ்கரதாஸ்

நூல் மதிப்புரை: .முருகபூபதி தொகுத்த "மதுரகவி பாஸ்கர தாஸின் நாட்குறிப்புகள்"


தாத்தா தாஸின் நாட்குறிப்புகளை அவரது பேரன் முருகபூபதி பல ஆண்டுகள் தேடித் தேடி அவற்றைக் கோர்த்து அற்புதமாய் இந்நூலை நமக்குத் தந்துள்ளார். இந்த நாட்குறிப்பு 1.1.1917 லிருந்து துவங்குகிறது. 92 ஆண்டுகளுக்கு முன்பிருந்த தமிழக மக்களையும், அவர்களது கலைவாழ்வையும் முழுமையாக 20.9.1951 வரை 34 ஆண்டுகள் பதிவு செய்துள்ளார். இது ஒரு கடிதம், தகவல் இலக்கியமாய், கலைக்களஞ்சியமாய் 719 பெரிய பக்கங்களாக பாரதி புத்தகாலயம் வெளியிட்டு சாதனை படைத்துள்ளது. தமிழகத்தின் சமூக, அரசியல், கலை வரலாற்றை, நூறாண்டுகளுக்கு முன்பிருந்த வாழ்க்கையை நாம் நேரில் தரிசிக்க முடிகிறது. அந்த வகையில் இப்பெருநூல் ஒருகலைஞனின் காலப்பெட்டகமாய்த்திகழ்கிறது.

தாஸ் 1892ம் ஆண்டு ஜூன் 6ம்நாள் தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் என்ற ஊரில் பிறந்தார். இளவதிலேயே மதுரையில் தனது பாட்டி வீடு சென்று நாடகக் கலைஞராய் மலர்ந்தார். கதரை உடலிலும் காந்தியை உள்ளத்திலும் ஏந்தி கடைசி வரை பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பில் உறுதியாய் நின்றுள்ளார். ஏகாதிபத்திய எதிர்ப்புப் பாடல்களை எழுத மேடையில் பாடியதற்காக 29 முறை கைது செய்யப்பட்டுள்ளார். இவரது பாடல்களைப் பாடிய விஸ்வநாததாஸ், காதர்பாட்சா போன்ற கலைஞர்களும் அக்காலத்தில் போலீசாரால் மேடையில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒருமேடை நாடக நடிகராக, பெருங்கவிஞராக, நடன, நாட்டிய, பாடல், ஆடல், நாடக நடிப்புப் பயிற்சியாளராக, திரைக்கதை மற்றும் உடையாடல் எழுதுபவராக, கிராமிய நாட்டுப்புறப் பாடல்களைச் சேகரிப்பவராக இவர் பன்முகப் பரிமாணங்களைக் கொண்ட கலைஞராக வாழ்ந்ததை இந்நாட்குறிப்புகளிலிருந்து அறிய முடிகிறது. தனக்கு மேடையிலும், தனிப்பட்ட முறையிலும் கிடைக்கும் பணம் மற்றும் பரிசுகள் சககலைஞர்களுக்கு வாரி வழங்கும் வள்ளலாக வாழ்ந்துள்ளார். சாதி வேறுபாடுகளைப் பாராமல் சக கலைஞர்கள், தலித்துக்கள் வீடுகளில் சாப்பிட்டு, அவர்களுக்கும் தனது வீட்டில் விருந்தளித்திருக்கிறார். தீண்டாமையை எதிர்த்தவராக இருந்துள்ளார்.

வெள்ளைச்சாமி என்ற இவரது இயற்பெயரை ராமனாதபுரம் சேதுபதி இவரைத் தனது அரசவையில் பாடவைத்து "முத்தமிழ் சேத்திர மதுரகவி பாஸ்கரதாஸ்" என்ற பெயரைச் சூட்டினார். இதில் பாஸ்கரன் என்பது பஸ்கர சேதுபதி மன்னரைக் குறிக்கும். இவரது பாடல்கள் பெரும்பாலும் விடுதலைப் போராட்ட வீரர்கள், அவர்களது தியாகங்கள், குறிப்பிடத்தகுந்த நிகழ்ச்சிகள் பற்றியதாகவே எழுதியுள்ளார். பிரிட்டிஷாருக்கு அஞ்சாமல் ஒவ்வொரு பாடலிலும் தனது பெயரையும் பதிவு செய்துள்ளார். மதுரை காங்கிரஸ் கமிட்டித் தலைவர் வைத்தியநாதய்யருடன் பேசி மதுரையில் நடிகர்களைத் திரட்டி கள்ளுக்கடை மறியல் போராட்டம் நடத்தியுள்ளார் தாஸ். புதுச்சேரி சென்று மூன்று மாத காலம் தலைமறைவு வாழ்க்கையும் நடத்தியுள்ளார்.

தாஸ் தனது காலத்தில் வாழ்ந்த விடுதலைப் போராளிகள் மகாத்மா காந்தி முதல் அனைத்துத் தலைவர்களோடும் தொடர்புடன் இருந்துள்ளார். காந்தியைப் பற்றிப்பாடல் எழுதி அவரிடமே கொடுத்துள்ளார். நாமக்கல் கவிஞர் போன்ற அவர் காலத்திய கவிஞர்களோடும் நெருக்கமாக இருந்துள்ளார். அக்கால நாடகக் கலைஞர்கள் அனைவரோடும் குருபீடத்தில் மதிக்கப்பட்டுள்ளார். எம்.எஸ்.சுப்புலெட்சுமி, கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள் போன்ற கலைஞர்கள் இவர் இயற்றிய பாடல்களைப் பாடியுள்ளனர். நடிகர்களுக்கு மனக் குவிப்பு, நடுங்காத தேகம், ஞாபக சக்தி, குரல் வலிமை, உடை பற்றிய ஞானம் பற்றி வகுப்புகள் நடத்தியுள்ளார். அவரது மனக் குவிப்பு இதுவரை கேள்விப்படாத ஒரு சொல்லாகும்.

"ஜட்கா ஓட்டி சின்னுத்தேவன் பீட்டர் குடும்பனின் மகள் ஜெபமேரியைத் திருமணம் பண்ணிவைக்குமாறு அழுது வேண்டினான். அவனுடன் சென்று பீட்டர் குடுமபனின் குடும்பத்தாருடன் பேசி முடித்தேன். பீட்டர் குடும்பனின் பூட்டி என்னை ஆசீர்வசித்து அனுப்பினாள்" என்று தாஸ் தனது நாட்குறிப்பில் எழுதியுள்ளார். சாதிக்குரோதங்கள் மலிந்த அன்றைய சமூகத்தில் இதையெல்லாம் செய்து முடிக்கிற அளவுக்கு செல்வாக்குமிக்கவராய் திகழ்ந்துள்ளார். அதுமட்டுமல்ல, மணப் பெண் ஜெபமேரிக்கு ஒரு தங்கச் சங்கிலியும் பட்டுச்சேலையும் வாங்கிக் கொடுத்துள்ளார். தனக்குக் கிடைக்கும் பணத்தை எல்லாம் வாரி இறைத்திருக்கிறார். பணமில்லாத போது நோட்டு எழுதியும், சொத்தை அடமானம் வைத்தும் கடன் வாங்கிக் கூட பலருக்கு உதவியுள்ளார். நாடகத் துறைப் பணிகளோடு அவர் விவசாயமும் தொடர்ந்து செய்து வந்தது வியப்பாயிருக்கிறது.

தமிழகம் முழுவதும் சுற்றிய இவர் கொழும்பு யாழ்ப்பாணம் முதல் ஆலப்புழை வரை சென்று நாடகங்கள் நடத்தியுள்ளார். பின்னாளில் கம்யூனிஸ்ட்டுத் தலைவரான கே.பி.ஜானகியம்மாள் ஸ்திரீபார்ட் நடிகையாக ஏராளமான நாடகங்களில் நடத்துள்ளார். அவரது இளவயது புகைப்படமும் இந்நூலில் வந்துள்ளது. 1929ம் ஆண்டில் தங்கம் பவுன் ரூ.13க்கு கிடைத்துள்ளது. தாஸ் மதுரை அமெரிக்கன்கல்லூரி மாணவர்கள், மற்றும் பள்ளி மாணவர்களுக்கு தனித்தனியே நாடகப் பயிற்சியளித்துள்ளார். அவர் எழுதிய பாடல்களில் பனங்காட்டுப் பாடல்கள், சேவல் கட்டுப்பாடல், வன்னிமரப்பாடல்கள் வரை உள்ளன. 1931ல் ஒரு சந்தன சோப் விலை 4 அணா தான். அவர் தனது நாட்குறிப்பில் அன்றாட வரவு - செலவுகளையும் தவறாது எழுதியிருப்பதால் அக்கால விலைவாசி நிலைமைகளை நம்மால் புரிய முடிகிறது.

1938ல் மதுரையில் பேய் பொம்மை என்ற ஆங்கிலப்படத்தை தாஸ் பார்த்துள்ளார். சினிமா காட்சியின் போது பயந்து ஓடியசிலருக்கு தியேட்டர்காரர்கள் பாலும் பழமும் கொடுத்தனர் என்று குறிப்பிட்டுள்ளார். வயக்காட்டில் நின்ற மயில் கூட்டத்தில் காலில் காயம் ஏற்பட்ட ஆண் மயிலுக்கு மருந்திடச் சொல்லியிருக்கிறார் தாஸ். அவரது இறுதி நாட்களில் நாட்குறிப்பு பெரும்பாலும் நாகலாபுரத்திலேயே நிலைத்து விடுகிறது. நோயும் ஊசி மருந்துகளுமாய் குறிப்புகள் உள்ளன. ஆனால், பாடல்கள் எழுதுவது, பாடுவது மட்டும் குறையவே இல்லை. பலவிதமான மனிதர்கள், வினோதங்களைப் படித்தறிய முடிகிறது. கொடுத்தவன் ஏகாலியானாலும் அவனளித்த கொக்குக் கறியும் குதிரை வாலிச் சோறும் தாஸுக்கு இனிக்கிறது.

சினிமா சகாப்தம் தமிழகத்தில் 1931ல் துவங்குகிறது. தாஸ் திரைப்படங்களுக்கு வசனம் பாடல்களை எழுதியுள்ளார். காளிதாஸ், வள்ளிதிருமணம், பிரகலாதா, சுலோசனாசதி, திரௌபதி, வஸ்திராசுரன், ராதாகிருஷ்ணன், சதி அகல்யா, சாரங்கதாரா, ராஜா தேசிங், ராஜசேகரன், போஜராஜன், உஷா கல்யாணம், சித்திரஹாசன், ராதாகல்யாணம் போன்ற படங்களுக்குப் பாடல்கள் எழுதியுள்ளார்.

விடுதலைப் போராளிகள் போராட்டங்களை நடத்திச் சிறை சென்ற காலத்தில் தாஸ் தனது நாடகங்கள், பாடல்கள் மூலம் மக்களுக்குத் தேசபக்தியூட்டியுள்ளார். விடுதலைப் போரில் மக்கள் உற்சாகமுடன் பங்கேற்க அவரது பாடல்கள் உதவியுள்ளன. 75 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழக மக்களின் வாழ்க்கை, வளமைகள், நாடக மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள், நாதஸ்வரக் கலைஞர்கள், தலைவர்கள் என அனைவரையும் இந்த நாட்குறிப்பில் ஒரு சேர தரிசிக்கலாம். ஒப்பற்ற கலைஞனாக இருந்தும் எளிய மனிதர்களை நேசிக்கும் எளிய மனிதராகவே வாழ்ந்திருக்கிறார். இதை ஊன்றிப் படித்தால் ருசிகரமான தகவல்களும், ஆய்வாளர்களுக்கான விபரங்களும் கிடைக்கும். இம்மாபெரும் கலைஞர் 20.12.1952ல் நாகலாபுரத்தில் காலமானார்.

மதுரகவி பாஸ்கரதாஸின் மகள் சரஸ்வதியை மணந்த மருமகன் திரு.சண்முகம், ஒரு நாவல் எழுதியிருக்கிறார். அவரது புதல்வர்கள் தமிழ்ச்செல்வன், கோணங்கி, முருகபூபதி மூவருமே படைப்பாளிகள். மற்றொரு சகோதரர் பாலசுப்பிரமணியன் இவர்களுக்கு எல்லா வகையிலும் துணை நின்று வருகிறார். மதுரகவியின் பாரம்பரியத்தையும் சாதனைகளையும் இந்த நாட்குறிப்புகளில் நயம்படக் காண்கிறோம். மிகுந்த சிரமப்பட்டு இந்த நாட்குறிப்புகளை அவரது பேரன் .முருகபூபதி தொகுத்துள்ளார். இதே போன்று அவரது பாடல்களையும் தொகுப்பதோடு அவற்றை விசிடிகளில் பதிவு செய்து வெளியிட்டால் பெரும் சாதனையாய் நிலைத்து நிற்கும். இந்நூலை பாரதி புத்தகாலயம் சிறந்த முறையில் அச்சிட்டு வெளியிட்டுள்ளது.


புத்தக மதிப்புரை-எஸ்..பி
நன்றி: கீற்று


...அப்போது தேவர்கள் மாநாடு ஒன்று கூட்டியிருக்கிறார்கள். அந்த மாநாட்டிற்கு மதுரகவி பாஸ்கரதாஸ் அவர்களையும் முதுகுளத்தூர் முத்துராமலிங்கத் தேவர் அவர்களை-யும் கூப்பிட்டார்களாம். இருவருமே ஒரு ஜாதியின் பெயரால் கூட்டப்படும் மாநாட்டிற்கு வரமாட்டோம் என்று சொல்லிவிட்டார்களாம். மதுரகவி பாஸ்கரதாஸ் அவர்கள் மிகப் பெரிய இந்துஅபிமானி என்பது தெரிய வருகிறது. ஆனால், அவர் எல்லா ஜாதிக்காரர்-களோடும் மதத்தினரோடும் நல்லுறவு கொண்டு அற்புத மனிதராகத் தெரியவருகின்றார் அவருடைய நாட்குறிப்பின் மூலம்....

நூல் அறிமுகம் - .முத்துச்சாமி (கீற்று தளத்தில்)


...நாடகத்தில் தீவிர ஈடுபாடுகொண்ட வெள்ளைச்சாமித் தேவரென்ற பாஸ்கரதாஸ் 1925இல் இந்து தேசாபிமானிகள் செந்தமிழ் திலகம் என்னும் பாடல் நூலை வெளியிட்டார். இவரது பாடல்கள் சாதாரண வர்ண மெட்டுகளுடன் எளிதாகப் பாடக்கூடியவையாயிருந்ததால் மக்களிடையே பெரும் வரவேற்புப் பெற்றன. இவரது பல நாடக மேடைப் பாட்டுகளும் தனிப் பாடல்களும் பிராட்காஸ்ட் கம்பெனியின் கிராம்ஃபோன் தட்டுகளாக வெளிவந்தன. அதிலும்வந்தே மாதரமே, நம் வாழ்விற்கோர் ஆதாரமேஎன்னும் பாட்டு மக்களிடையே மிகப் பிரபலமடைந்தது. இவரது பாடல்களைப் பாடாத கலைஞரே இல்லை....

...மதுரையில் நாற்பதுகளில் இயங்கிய சித்ரகலா என்ற ஸ்டுடியோவுடன் பாஸ்கரதாஸ் கொண்டிருந்த தொடர்பு பதிவுசெய்யப்பட்டிருக்கின்றது. நடிகர்களின் அமைப்பிற்கெல்லாம் முன்னோடியாய் அமைந்த மதுரை நடிகர் சங்கத்தை 1926இல் தோற்றுவித்தவர் பாஸ்கரதாஸ்....

.... வே. ரா, . மா. பாலகிருஷ்ண கோன், அரியக்குடி ராமானுஜம் அய்யங்கார், எம். எஸ். விஜயாள், முத்துராமலிங்கத் தேவர், தண்டபாணி தேசிகர் எனப் பல தமிழ்நாட்டு வரலாற்று நாயகர்களுடன் தொடர்புகொண்டிருந்தார். எம். எஸ். சுப்புலட்சுமிக்கு பாஸ்கரதாஸ் பாட்டுகள் எழுதித் தந்திருக்கின்றார்....

மதிப்புரை- தியோடர் பாஸ்கரன் (காலச்சுவடு)


மதுரகவி பாஸ்கரதாஸின் நாட்குறிப்புகள்
புத்தக விலை ரூ.400
வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை,
சென்னை – 18
.
.

Tuesday 16 March, 2010

சிவாஜி கணேசனுக்கு பிரியாவிடை கூறல் (கார்த்திகேசு சிவத்தம்பி)

```````````````````````````````````````````````````````
ஒரு பண்பாட்டாய்வியற் குறிப்பு

சிவாஜிகணேசன் மறைந்து விட்டார் என்ற செய்தி தொலைக்காட்சி வழியாக வந்தபொழுது (21.07.2001) அது தமிழகத்தின் கடந்த மாத காலத்தின் அசாதாரண நிகழ்வுகள் பற்றிய நினைப்புகளுக்குள் அமிழ்ந்து விடும் போலவே இருந்தது.

ஆனால், வந்த நிகழ்ச்சிகள் அப்படி அமையவில்லை. மரணம் இயற்கை மரணம் என்றாலும், இழப்பு திடீரென வந்தது போலவும், அந்த இழப்பு சின்னதொன்றல்ல, மிகப் பெரியது, முழுத் தமிழகம் தழுவியது என்ற தொனியில் ஊடகங்கள் எடுத்துரைக்கத் தொடங்க அந்த எடுத்துரைப்பு தமிழுணர்வில் படியத் தொடங்க, அந்த மனிதன் மறைவுக்குள் தமிழ்ப் பண்பாட்டின் 'இனங்காணல்கள்' சில தொக்கி நிற்கின்றன என்பது புரியத் தொடங்கியது.

அரசியல் தன்னை ஒதுக்கியது கண்டு ஒதுங்கிப் போய் தன் நடிப்பும் தானும் என்றிருந்த சிவாஜிகணேசனுக்கு இறுதி மரியாதையாக வீரர்களுக்கு வழங்கப்படும் இறுதி கெளரவம் (துவக்குவேட்டு மரியாதை, 'லாஸ்ற்போஸற்' இசைப்பு) வழங்கப்பட்டது. சோகம் தமிழகத்தையும் தமிழ் பேசும் உலகத்தையும் தாண்டியது. அனைத்திந்திய சோகம் ஆயிற்று.

சென்னையில் நடந்த இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளாத வெளிமாவட்டத்தினர் தங்கள் தங்கள் மாவட்ட நகரங்களில் இறுதிமரியாதைச் சடங்குகளை மீளுருப்படுத்திக் கொண்டாடினர். பெண்கள் அழுதனர். ஆண்கள் மொட்டை அடித்தனர்.

உண்மையான ஆச்சரியம் என்னவென்றால் இந்த உணர்வு வெளிப்பாடுகள், போலியானவையாக இருக்கவில்லை. சினிமாத்தனம் என்று சொல்வோமே அந்தப் பண்பினவாக இருக்கவில்லை.

இந்த 'நிகழ்ச்சி' (நிகழ்வு அல்ல) தமிழ்நாட்டின் பண்பாட்டுச் சமூகவியலில் ஈடுபாடு கொண்டுள்ளவர்கள் ஆய்வுக்கான ஒன்றாகும்.

அரசியற் பலமும், சமூக அதிகாரமும் இல்லாதிருந்த சிவாஜிகணேசனுக்கு இத்தகைய நெஞ்சுருக்கும் இறுதி மரியாதை ஏன் கிடைத்தது என்பது ஒரு முக்கியமான வினாவாகும்.

அதற்கான விடை காணும் பணியினை மேற்கொள்வதற்கு முதல் இந்த நிலைமையை உருவாக்கியது ஊடகத் தொழிற்பாடு தான் என்பதை மறுக்கமுடியாது. தொலைக்காட்சி அலைவழிகளும் வானொலிச் சேவைகளும் சிவாஜிகணேசன் எதனைச் 'சுட்டி' நின்றார் என்பதை மீளமீளச் சொல்லின. இவையாவற்றையும் தொகுத்துக் கூறுவது போல் அமைந்தது, சன் தொலைக்காட்சியினர் அளித்த ஒரு ஒன்றரை நிமிட நேர சிவாஜித் தொகுப்பு. சிவாஜி நடித்த பிரதான பாத்திரங்கள் ஒவ்வொன்றையும் ஒன்று மாறி ஒன்றாக நம் கண்முன்னேயோட விட்டனர்.

அப்பொழுது தான் அந்த உண்மை பளிச்சிட்டது.

தமிழகத்திலும், தமிழ் பேசும் நாடுகளிலும், தமிழுணர்வு, தமிழ் பாரம்பரியம் பற்றிய சிரத்தை சமூக அரசியற் பிரக்ஞையில் முக்கிய இடம் வகித்த இருபதாம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் தமிழர் தொன்மைகளிலும், வரலாற்றிலும் முக்கிய இடம் பெறும் பலரை 'மீள் உருவப்படுத்தியவர்' சிவாஜிகணேசனே.

காப்பிய பாத்திரங்கள் - கர்ணன், பரதன்; சமய பாத்திரங்கள் - அப்பர்; அரசியற் பாத்திரங்கள் - இராஜராஜன், கட்டபொம்மன், வ.உ. சிதம்பரனார்.

சிவாஜியின் ஆளுமைக் கூடாகவே நாம் இந்தப் பாத்திரங்களைக் கண்டோம். அவர்களை மனிதர்களாகச் சந்தித்தோம்.

தமிழ்ப் பண்பாட்டு உணர்வு விருத்தியில் இந்த 'மீள் உருவாக்கம்' மிகமிக முக்கியமாக அமைந்தது. இந்த உருவாக்கங்களுக்கான அரசியல் இலாபத்தைப் பெறும் ஆற்றல் விழுப்புரம் சின்னையா கணேசனிடத் திலிருக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், அந்த நடிகன் மூலமாகவே நாம் தமிழனின் அசாதாரணத் திறன்களைக் கற்பனை செய்தோம், கண்முன் நிறுத்தினோம்.

அந்த வகையில் சிவாஜி தமிழ்ப் பண்பாட்டின் 'உருவத் திருமேனிகளில்' ஒன்றாகிறார்.

சிவாஜி பற்றிய ஊடக மீள நோக்குகள் தமிழ் சினிமா மூலம் நாம் பெற்றுக் கொண்ட 'உணர்வு அகற்சி'களை காட்சிப்படுத்திய - காணபியப்படுத்திய கலைஞனை, அவன் திறனை முதனிலைப்படுத்தின.

அந்த உணர்வின் படிப்படியான ஆழப்பாடுதான் சிவாஜியின் செயற்பாடு மூலம் நாம் எவ்வகை உருவாக்கங்களைப் பெற்றோம் என்பதை வெளிப்படுத்தத் தொடங்கிற்று.

சிவாஜியின் பாத்திரங்கள் பற்றிய சிந்தனை சமகாலத் தமிழ்ப் பண்பாட்டின், அந்த பண்பாட்டின் வாழ்வியலில், ஆள்நிலை உறவுகளில், சமூக அலகு உறவுகளில், குறிப்பாக குடும்ப உறவுகளில் எவையெவை மோதுகை அம்சங்களாக அமைகின்றன என்பது பற்றிய உணர்வை வலுப்படுத்தும்.

நாடகத்தின் - அரங்கின் - பிரதான பயன்பாடுகளில் ஒன்று மனிதர்களை அவர்களின் மோதுகை நிலையிலே காட்டுவது தான். இது நாடகம் (அரங்கு) பற்றிய உலகப் பொதுவான விதி. அரங்கின் விஸ்தரிப்பாக அமைந்த சினிமாவும் இந்த மோதுகைகளை மிகச் சிறப்பாகப் பதிவு செய்துள்ளது.

தமிழ் நிலையில் இந்த மோதுகைகளை சிவாஜிகணேசனைப் போன்று எவரும் சித்தரிக்கவில்லை. பாத்திரத் தொகையிலும், சித்தரிப்பு ஆழத்திலும் சிவாஜியின் சாதனை மிகப் பெரியது.

மிக மேலோட்டமாகப் பார்த்தாலே இந்த உண்மை புலனாகும். பாசமலர், படிக்காத மேதை, பாகப்பிரிவினை, மங்கையர் திலகம், தங்கப்பதக்கம், வசந்தமாளிகை, முதல்மரியாதை, தேவர் மகன் முதலிய திரைப்படங்களில் பிரதான கதாபாத்திரங்களின் (சிவாஜி சித்தரித்தவை) மோதுகை நிலைகளைப் பார்த்தால் இந்த உண்மை நமக்கு புலப்படும். இந்த அம்சத்தைப் பற்றி சற்று உன்னிப்பாக ஆராய முனையும் பொழுதுதான், சிவாஜியின் நடிப்பு வரலாற்றின் ஒரு முக்கிய உண்மை தெரியவரும். சிவாஜி சித்தரித்த பாத்திரங்கள் பெரும்பாலும் (ஏறத்தாழ எல்லாமே) இந்த மோதுகைகளின் 'பாடு'களை தாங்குகின்றனவாக - துன்பத்தையேற்றுக் கொள்கின்றனவாக அமைந்தன என்பது தெரியும்.

சிவாஜிகணேசன் பற்றிய நினைவுகள் நமக்கு, நமது பண்பாட்டு வட்டத்து வாழ்வியலின் 'மனிதத்துவப் பாடுகளை', 'மனித நிலை சோகங்களை' எடுத்துக் காட்டுகின்றனவாக அமையும்.

சிவாஜிகணேசனுக்குள் இருந்த நடிப்புத் திறன் பிறர் இன்ப, துன்பங்களை தன் உணர்வு நிலைக்குள் உள்வாங்கிச் சித்தரிப்பவன் - இந்த மனித மோதுகைச் சித்தரிப்புக்கான தேடலை ஊக்குவித்தது.

'நடிகனுக்கான சவால்' என்பது இந்தச் சித்தரிப்புக்குள் தான். தனது இந்தப் பணி நன்கு நிறைவேறுவதற்கு அந்த நடிகரோடு 'ஊடாடும்' மற்றைய பாத்திரம் முக்கியமாகும். இதனால், சிவாஜியோடு நடிக்கும் நடிகையர், துணைப் பாத்திரங்கள் மிக முக்கியமாகினர். தான் மதித்த நடிகையர் என பானுமதி, பத்மினி, சாவித்திரியின் பெயர்களை சிவாஜிகணேசன் எடுத்துக் கூறியுள்ளார். (இலங்கை வானொலி 22.07.2001 அன்று இ.தயானந்தா அளித்த நினைவு நிகழ்ச்சி) சிவாஜிகணேசன் 'சுட்டி'நிற்கும் பண்பாட்டுத் தொழிற்பாடுகளைப பற்றி ஆராயும் பொழுது தான் சிவாஜிகணேசனின் சினிமா வருகையும், அதன் பின்புலமும் உற்றுநோக்கப்பட வேண்டியவையாகின்றன.

தமிழ்த் திரையுலகத்தின் 'அமர' கதாநாயகன் சிவாஜி ஒருவர் தான் என்று கூறவே முடியாது. அவர் காலத்து வாழ்ந்த மதனபள்ளி கோபால் இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) முக்கியமானவர். எம்ஜிஆர் தமிழ் சினிமாவை பயன்படுத்தியது போலச் சிவாஜியால் பயன்படுத்த முடியவில்லை. வளப்படுத்தியதுடன நின்று விடவேண்டிய நிலைமை ஏற்பட்டது.

இங்கு முக்கியமாக பார்க்க வேண்டுவது, சிவாஜியின் சமகாலத்தவர்களிலும் பார்க்க, சிவாஜியின் வருகைக்கு முன்னர் இருந்தவர்களே.

தியாகராஜ பாகவதருக்குச் சிவாஜியை விட கவர்ச்சி இருந்தது. கே.ஆர். ராமசாமி 'வேலைக்காரி' மூலம் மிகப் பெரிய புகழை ஈட்டியிருந்தார். சிவாஜிக்கு முன்னர் வந்தவர்களுக்கும் சிவாஜிக்குமிருந்த முக்கிய வேறுபாடு, அவர்கள் பிரதானமாக பாடகர்களே (பாடகர்கள் அல்லாதவர்கள் பிரசித்தமடைவது 1950 களின் பின்னரே - எம்ஜிஆர், ஜெமினிகணேசன் முதலியோர்) சிவாஜி உச்சரிப்புச் செம்மையையே தனது பிரதான ஆஸ்தியாகக் கொண்டிருந்தார்.

சிவாஜியின் நடிப்பு அங்க அசைவுகளில் மாத்திரம் நம்பியிருக்கவில்லை. அது 'சொற் சீரமை'யிலும் தங்கியிருந்தது.

இந்தச் சொற் சீரமை ஓர் அரசியல் பின்புலத்தோடு வந்தது. அண்ணாதுரை, கருணாநிதி தமிழ்நாட்டின் அரசியல் மேடையையும், அரங்கையும், சினிமாவையும், தமது சொற்பொழிவு முறையாலும், எழுத்து முறையாலும் மாற்றிய காலம் அது. அரங்கில் பாட்டுப் போய் வசனம் முக்கியமான காலம். கதையிலும் பார்க்க வசனத்துக்கு முக்கியத்துவம் வரத்தொடங்கிய காலம்.

சினிமாவுக்குள் இந்தப் போக்கை ஸ்திரப்படுத்திய பாரசக்தி மூலம் சிவாஜிகணேசன் அறிமுகமானார். தமிழ்ச் சினிமாவில் நடிப்பு, இப்படத்துடன் ஒரு புதிய பரிமாணத்தை பெறுகின்றனது.

சிவாஜிகணேசனின் இந்த வருகை இவரை மற்றச் சினிமா நாயகர்களிலிருந்து வேறுபடுத்துகின்றது.

தமிழ்ச் சினிமாவுக்கான நடிப்புக் கலைஞர் வருகை ஸ்பெர்ல் நாடக மரபு வழியாகவே நிகழ்ந்தது. இதனால், ஆரம்ப காலத் தமிழ்ச் சினிமா அமைப்பிலும், எடுத்துரைப்பிலும் அந்த நாடக அரங்கின் இயல்புகளையே கொண்டிருந்தது.

சிவாஜிகணேசனின் நடிப்பு முறைமை இந்திய நாடக மரபின் 'நாட்டிய தர்ம'முறை வழியாக வருவது (இது பற்றி மூன்றாவது மனிதன் ஜூலை இதழில் வந்த எனது கட்டுரையைப் பார்க்கவும்) சிவாஜிகணேசன் 'நாடக வழக்கு'க்கான ஆற்றுகையை தெருக்கூத்து மரபுக்குரிய 'அகல்வீச்சு' ஆங்கில வழியாகச் செய்தார்.

அப்படித் தொடங்கியவர் பின்னர் படிப்படியாக சினிமா என்ற ஊடகத்தின் தனித்துவமான 'காமரா வழிப்பார்வை எடுத்துரைப்பு' என்ற அம்சத்தினால் உள்வாங்கப்பட்டு அதற்குரிய நடிப்பிலே கவனம் செலுத்தத் தொடங்குகிறார்.

நடிகர் முதன்மைக்குப் பழக்கப்பட்டுப் போன தமிழ் சினிமா படிப்படியாக 'டைரக்டர் முதன்மை'க்கு வரத்தொடங்கியது. இந்த மாற்றத்தில் பாலச்சந்தர் பெயர் பெரிதும் அடிபட்டாலும் உண்மையில் கட்புலநிலை, நின்று நோக்கும் பொழுது தமிழ்ச் சினிமாவின் தமிழ் மண்வாசனை பாரதிராஜாவுடனேயே முனைப்புப் பெறுகின்றது.

பாலச்சந்தர், பாரதிராஜா வருகைக்கு முன்னர் எம்ஜிஆர், சிவாஜி 'கோலோச்சி' நின்ற காலத்தில் படப்பிடிப்பின் பொழுது கமராவின் அசைவியக்கத்தையும், கோணங்களையும் இந்தப் பெரும் நடிகர்களே தீர்மானித்தார்களாம். (இது பற்றி சத்யஜித்ரே கூட ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்) அந்த அமைப்பு 'மேடைத்தன்மை' யானதாக விருந்தது.

நெறியாளர்கள் முக்கியமாகத் தொடங்க சிவாஜியின் நடிப்பில் புதிய ஒரு விகசிப்பு ஏற்படுகின்றது. 'முதல் மரியாதை' சிவாஜியின் சினிமா வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாக அமைந்தது.

நாடக மரபின் சிசுவாக இருந்த சிவாஜிகணேசன், சினிமாவுக்கேற்ற நடிப்பின் விற்பன்னராகினார். சிவாஜியின் சினிமா வாழ்க்கை தமிழ்ச் சினிமாவின் இந்த வரலாற்றுக் கட்டத்தை எடுத்துக் காட்டுகின்றது.

சினிமா படிமங்களின் கலை - அசையும் படிமங்களின் கலை. அதனால்தான் அதை 'மோர்ன் பிக்சர்' (அசையும் படம்) என்பர்.

சமகால ஊடக உலகின் படிமத் தயாரிப்பில் சினிமாவுக்கு ஒரு முக்கிய இடமுண்டு. உலக நிலையில் தொழிற்பட்ட இந்த உண்மை தமிழ்ப் பண்பாட்டினுள்ளும், தமிழ்ச் சினிமாவின் ஊடாகத் தொழிற்படத் தொடங்கியது.

பணபாட்டுப் பிரக்ஞை பிரதானப்படத்தொடங்கிய சமூக அரசியற் சூழலில் அதற்கான ஆள்நிலைப் படிமங்களும் தோன்றின. அந்த நடைமுறையில் தனது சித்தரிப்பு திறனாலும், பல்வேறு பாத்திரத் தேர்வினாலும், நமது பண்பாட்டு வாழ்வியலின் ஒரு 'உருவத்திருமேனி'யாக சிவாஜிகணேசன் என்ற வி.சி. கணேசன் திகழ்ந்தார்.

அவர் மறைவுதான் அவரின் பாரிய படிம வாக்க முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்திற்று.

தமிழ்ப் பண்பாட்டில் நாடக ஆற்றுகையாளர்களை விதந்து கூறும் பண்பு நவீன காலத்திலேயே ஆரம்பிக்கின்றது. இவர்களின் பங்களிப்பு தமிழ்ப் பண்பாட்டின் நவீன கால இயக்கத்துக்கு முக்கியமாகிற்று. என்.எஸ். கிருஷ்ணன் எம்.ஜி. இராமச்சந்திரன் என வரும் அப்பட்டியலில் சிவாஜிகணேசனுக்கு நிரந்தரமான இடமுண்டு.

தினகுரல் 29.07.2001

நன்றி: ஆறாம்திணை.காம்

Monday 15 March, 2010

போற்றிப்பாடடி பொண்ணே..

````````````````````````````````````````````````````````



"வானம் தொட்டு போன மானமுள்ள சாமி...
தேம்புதய்யா இங்கே தேவர்களின் பூமி

பட்டத்துக்கு வேறு சிற்றரசன் யாரு
தங்கத்துக்கு வேறு மாற்று உண்டா கூறு

திருந்தாம போச்சே ஊரு சனந்தா...ன்
தத்தளித்து நிக்குதய்யா தேவர் இனந்தா..ன்

போற்றிப்பாடடி பொண்ணே....
தேவர் காலடி மண்ணே.."

.
.

Wednesday 10 March, 2010

கேள்வி ஞானம் - வைரமுத்து

தொலைதூர
விமானமா?

தூக்க மத்திரை
இட்டுக்கொள்

விமானம் விரைந்தால்
தூரம் தெரியாது

விமானம் விழுந்தால்
துக்கம் தெரியாது
``````````````````````````````````````````````````````

அடுத்தவன்
மனைவி மேல்
ஆசை கொள்ளாதே

அது
நல்ல பாம்பின்
படத்தை
நாவால் ஸ்பரிசிப்பது
``````````````````````````````````````````````````````

நாற்பது வரை
பணத்தை நீ
தேட வேண்டும்

நாற்பதின் பின்
பணம் உன்னைத்
தேட வேண்டும்
``````````````````````````````````````````````````````

படுக்கையறையில்...

எழுதுகோல்
தொலை பேசி
எதுவும் வைக்காதே

உன் சுத்தமான சுதந்திரம்
அந்தச்
சுவர்களுக்குள்ளேதான்
``````````````````````````````````````````````````````

அறிவாளியாய் இரு
முட்டாளாய் நடி
``````````````````````````````````````````````````````

கன்னக்குழி
அழகென்று
பெண்ணைப்
புகழாதே

அதுவே
உன் சவக்குழியாய்
இருக்கலாம்
``````````````````````````````````````````````````````

சாப்பாட்டு மேஜையும்
கட்டிலும்
தொடமுடியாத
தூரத்தில் இருக்கட்டும்

அந்த தூரம்
உன் ஆயுளின் நீளம்
``````````````````````````````````````````````````````

தும்மல் காதல்
இரண்டையும்
வெட்கப்படாமல்
வெளிப்படுத்து

அடக்கினால்
வேண்டாத இடத்தில்
வெளிப்பட்டுவிடும்
``````````````````````````````````````````````````````

வாய் நீராடும்
வாய்ப்புள்ள
போதெல்லாம்
சுட்டுவிரல் கொண்டு
தொட்டழுத்து ஈறுகளை

பரவும் ரத்தம் பலம்

ஈறுகெட்டால்
சொல் எஞ்சும்

ஈறு கெட்டால்
பல் எஞ்சுமா?
``````````````````````````````````````````````````````

புதுமனைவியின்
தாய்மை

புதுத்தொழிலில்
லாபம்

இரண்டையும்
மூன்றாண்டு
எதிர்பாராதே
``````````````````````````````````````````````````````

மாட்டுவால் சூப்
மன்மத பானமாம்

துரும்பும் அதனால்
இரும்பாய் மாறுமாம்

இப்போது புரிகிறது

மாடு பிடித்தவனுக்கே
மணமகள் ஏன் என்று
``````````````````````````````````````````````````````

எப்போதும் கைக்குட்டை
இரண்டு கொள்

தும்மலுக்கொன்று
தூய்மைக்கொன்று
``````````````````````````````````````````````````````

நாய் குரைத்தால்
ஓடாதே

அச்சப்படல்
நாய்க்கு
அழைப்பு மடல்

எளியதன் பலவீனம்
வலியதன் பலம்
``````````````````````````````````````````````````````

பயணமா?

பெட்டியிலும்
வயிற்றிலும்
காலியிடம்
இருக்கட்டும்
``````````````````````````````````````````````````````

தடுமனா
மருந்து-சாப்பாடு

காய்ச்சலா
மருந்து - பட்டினி
``````````````````````````````````````````````````````

பெரிய மனித
தரிசனமா?

அதிகாலை போ

இல்லையேல் ..

அவனினும் பெரியோன் தேடி
அவன் போயிருப்பான்
``````````````````````````````````````````````````````

ரகசியமா?

காதலிக்குச் சொல்

ஒரு காதில் வாங்கி
மறு காதில் விடுவாள்

மனைவிக்குச்
சொல்லாதே

இருகாதில் வாங்கி
வாய் வழி விடுவாள்
``````````````````````````````````````````````````````

பல்துலக்கும் போதே
உன்
சீப்புக்கும் பல் துலக்கு

தலையில் உள்ள
மண்ணுக்குச்
சாட்சி வேறு எதற்கு?
``````````````````````````````````````````````````````

உருவு கண்டு எள்ளாதே

ஒவ்வொரு விதையிலும்
ஒரு விருட்சம் ஒளிந்திருக்கிறது

அக்பரின் பிரசவம்
பாலைவனத்தில்
நிகழ்ந்திருக்கிறது.
``````````````````````````````````````````````````````


-கவிப்பேரரசு வைரமுத்து (1989)
புத்தகம்: வைரமுத்து கவிதைகள்
பக்க எண்: 479

.

Monday 8 March, 2010

தேவர் போற்றி (நெல்லை கண்ணன்)

தேவரெனும்பெரு மனிதர் இந்த நாட்டின்
தேசீயம் தெய்வீகம் இரண்டும் காக்க
காவலெனக் கடவுளரே அனுப்பி வைத்த
கண்ணியத்தின் பேரூருவம் - ஏழைகளை
வாழ வைத்த வள்ளலவர் - முருகன் தன்னை
வழி பட்டுப் புகழேற்ற ஞானச் செம்மல்
வாழையடி வாழையென அவரைப் போற்றி
வணங்கி நிற்றல் தமிழருக்குப் பெருமையாகும்


மண வாழ்க்கை ஏற்றாரா இல்லை இல்லை
மக்களுக்காய் நாட்டிற்காய் வாழ்ந்து நின்றார்
பிணம் கூட உயிர் கொண்டு எழுந்து நிற்கும்
பேச்சாற்றல் பேராற்றல் அவரின் ஆற்றல்
கணம் கூட தனைப் பற்றிச் சிந்திக்காமல்
கர்ஜனைகள் புரிந்து நின்றார் நாட்டிற்காக
நிணம் தசை நார் எலும்பெல்லாம் தேவர் பிரான்
நினைவாக போற்றி நின்று என்றும் வெல்வோம்


உண்மையதே சொத்தாகக் கொண்டிருந்தார்
உயர் குணங்கள் கொண்டிருந்தார் - அச்சமெனும்
புன்மையது அவரிடத்தில் என்றும் இல்லை
புனிதர் எங்கள் தேவர் மகன் நேர்மை எல்லை
கண்ணினிய தமிழினத்தின் உண்மை நெறி
கருத்தாக்கி மேடையிலே பொழிந்த மேகம்
எண்ணி நிற்போம் பசும்பொன்னாம் தேவர் தம்மை
என்றென்றும் தமிழினத்தார் வெற்றி கொள்ள


வேட்பு மனுத் தாக்கல் உடன் முடிந்து விடும்
வெற்றியெனும் செய்தி அன்றே உறுதி படும்
போர்ப் பரணி தேவர் பிரான் போட்டியிட்டால்
போட்டியிடும் தொகுதி யெல்லாம் அவர்க்கே சொந்தம்
காப்பு என்றும் தேவர் பிரான் தமிழருக்கு
கண்ணியமாய் வாழ்ந்திருந்த இனியருக்கு
ஆர்ப்பரித்துத் தேவர் பிரான் போற்றி நிற்போம்
அவர் வழியில் தேசத்தைக் காத்து நிற்போம்


தேவர் இல்லா நாட்டில் இன்று எவரெவரோ
தெய்வம் இல்லை என்று சொல்லி ஆடுகின்றார்
காவலுக்குத் தேவர் பிரான் இல்லையென்று
கண் கலங்கி நிற்கின்றார் நல்லோரெல்லாம்
சேவற் கொடி வேலவனைத் தொழுது நின்ற
செந்தமிழின் தேவர் பிரான் தனை வணங்கி
ஆவலுடன் தேசீயம் தெய்வீகத்தை
அனைவருமே காத்து நிற்போம் தேவர் போற்றி


```````````````````````````````````````````````````
***************************************************
```````````````````````````````````````````````````

விடுதலைக்காய் கூட்டங்கள் நடத்தும் போது
விருதுநகர் வீதியெல்லாம் தமுக்கடித்து
அடுக்கடுக்காய் மக்களையே சேர்க்கும் வண்ணம்
அறிவிப்புச் செய்து நின்ற காமராஜை
தடுத்தவரைத் தாக்கி அங்கே கொடுமை செய்தார்
தனம் நிறைந்த நீதிக் கட்சி பணம் படைத்தோர்
அடுத்த நாளே தேவர் மகன் அங்கே சென்றார்
அடித்தவர்கள் ஒரு நாளில் வருத்தம் தன்னை


வெளிப்படையாய்க் கேட்கவில்லை என்று சொன்னால்
விருதுநகர் இருக்காது என உரைத்தார்
அடித்ததிலே பெருமை கொண்டோர் மனம் திருந்தி
அன்றைக்கே மன்னிப்பைக் கேட்டு நின்றார்
கொடுப்பதிலே பெருமை கொண்ட தேவர் மகன்
கொள்கைக்காய் நிற்கின்ற எங்கள் தொண்டர்
வடுவில்லா காமராஜர் தன் வழியில்
வராதீர் வந்தால் நான் வருவேன் என்றார்


தமிழ்க்கடல்
நெல்லைக்கண்ணன்
69.அம்மன் சந்நிதித் தெரு
திருநெல்வேலி நகரம்
627 00௬

நெல்லை கண்ணன் தளத்தைப் பார்வையிட..
.

Thursday 4 March, 2010

பாண்டித்துரை தேவர்

`````````````````````````````````````````````````
"சேது சமஸ்தானம்" என அழைக்கப்பட்ட இராமநாதபுரம் மாமன்னராக விளங்கிய பாண்டித்துரைத்தேவர், வள்ளல் பொன்னுசாமி - பர்வதவர்த்தினி நாச்சியார் தம்பதிக்கு 1867ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி இராமநாதபுரம், இராஜவீதி "கவுரி விலாசம்" என்ற இல்லத்தில் பிறந்தார். பெற்றோர் இட்ட பெயர் உக்கிரபாண்டியன். நாடறிந்த பெயரே பாண்டித்துரைத் தேவர். பொன்னுசாமி தேவர் இறந்தபோது பாலகராக இருந்த பாண்டித்துரைத் தேவரை வளர்க்கும் பொறுப்பை ஏஜண்ட் சேஷாத்திரி அய்யங்கார் ஏற்றார்.

அழகர் ராஜா எனும் புலவர் இளம் பருவம் முதல் பாண்டித்துரைத் தேவருக்கு தமிழ் அறிவை ஊட்டி வந்தார். வக்கீல் வெங்டேசுவர சாஸ்திரி ஆங்கில ஆசிரியராய் இருந்தார். பாண்டித்துரைத் தேவர் தமிழ், ஆங்கில மொழிகளில் புலமை பெற்றார்.

சிவ பக்தராகத் திகழ்ந்த பாண்டித்துரைத் தேவர் தந்தையின் அரண்மனையை அடுத்து மாளிகை ஒன்றைக் கட்டினார். சிவபெருமான் மீதான பக்தி காரணமாக அம்மாளிகைக்குச் "சோமசுந்தர விலாசம்" என்று பெயரிட்டார். 1901ம் ஆண்டு சொற்பொழிவாற்றுவதற்காக வள்ளல் பாண்டித்துரை தேவர் மதுரை வருகை தந்தார். அப்போது, "திருக்குறள் பரிமேலழகர் உரை" நூலை, விழா ஏற்பாடு செய்த அமைப்பாளரிடம் கேட்டார் தேவர். எங்கு தேடியும் அந்நூல் கிடைக்காதது கண்டும், பாண்டிய மன்னர்கள் முச்சங்கம் கண்டு முத்தமிழ் வளர்த்த மதுரையில், திருக்குறள் பரிமேலழகர் உரை கிடைக்காதது கண்டும், தமிழ்ப் பற்றுள்ள தேவரின் மனம் வருந்தியது.

தேவர் உடனடியாக, தமிழ் வளர்த்த மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கத்தை நிறுவினார். பழந்தமிழ் நூல்கள் அனைத்தையும் வெளியிட விரும்பினார். தமிழ்ச் சங்கம் சார்பில் தரமான தமிழ்க் கல்லூரியும் அமைத்தார் தேவர். பாண்டித்துரைத்தேவர் தலைமையில் 1901ம் ஆண்டு மே 24ம் தேதி, மதுரை மாநகரில் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவ, பெரும்புலவர்களின் ஆலோசனைக் கூட்டம் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் கூட்டப்பட்டது. நற்றமிழ் வளர்த்த மதுரையில் பாண்டித்துரைத்தேவர், தலைவராக வீற்றிருக்க 1901ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி நான்காம் தமிழ்ச்சங்கம் மலர்ந்து, தமிழ் மணம் வீசியது.

அந்நாளில்தான் பழந்தமிழ்க் கருவூலமாக, பாண்டியன் நூலகமும் உருவானது. "தமிழ் ஆய்வு மையம்" அமைத்த பாண்டித்துரைத்தேவர், மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் சார்பில், ஆய்வு நுணுக்கமும், ஆழமான புலமையும் மிக்க பெரும் புலவர்களின் கட்டுரைப் பெட்டகமாக 1903ல் "செந்தமிழ்" என்னும் நற்றமிழ் மாத இதழும் மலரச் செய்தார். அந்த "செந்தமிழ்" ஏடு நூற்றாண்டு விழா கண்ட ஏடு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சமயத்தில் பாண்டித்துரைத் தேவர் வெளியிட்ட ஓர் அறிக்கை மூலம், பாரதியாரின் "செந்தமிழ் நாடென்னும் போதினிலே" பாட்டு பிறந்த கதையை பாராதிதாசனின் "பாரதியாரோடு பத்தாண்டுகள்" நூல் வாயிலாக அறியலாம்.

மதுரைத் தமிழ்ச் சங்கத்தை முன்னின்று நடத்திக் கொண்டு இருந்த பாண்டித்துரைத் தேவர் செய்தி ஏடுகளில் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதன் கருத்து பின் வருமாறு:-

தமிழ்நாட்டைப் பற்றி சுருக்கமாக எல்லாரும் பாடக் கூடிய மெட்டில் தமிழ்த் தாய் வாழ்த்து எழுதி அனுப்புக. நல்லதற்குப் பரிசு தருகின்றோம் என்பது.
அந்த போட்டியில் கலந்து கொள்ளும்படி நானும் வாத்தியார் சுப்பிரமணியன் முதலியவர்களும் பாரதியாரைக் கேட்டோம்.அவர் முதலில் மறுத்தார். எங்களுக்காகவாவது எழுதுக என்றோம் "செந்தமிழ் நாடென்னும் போதினிலே" என்று தொடங்கி பாட்டொன்று எழுதினார் என்று குறிப்பிடுகிறார் பாரதிதாசன்.

சேது சமஸ்தானப் பெரும் புவலர்களாக விளங்கிய; தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர், இரா.இராகவையங்கார், மு.இராகவையங்கார், அரசன் சண்முகனார், இராமசாமிப்புலவர், சபாபதி நாவலர், சிங்காரவேலு முதலியார், நாராயண அய்யங்கார், சுப்பிரமணியக் கவிராயர், சிவஞானம் பிள்ளை, சிவகாமி ஆண்டார், யாழ்ப்பாணம் ஆறுமுகநாவலர், புலவர் அப்துல்காதிர் இராவுத்தர், எட்டயபுரம் சாமி அய்யங்கார், பரிதிமாற்கலைஞர், அரங்கசாமி அய்யங்கார், சி.வை.தாமோதரம் பிள்ளை ஆகியோரின் தரமான படைப்புகள் வெளிவர, மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடான "செந்தமிழ்" ஏடே உதவியது.

உலக மொழிகளிலேயே, தமிழ்மொழி, செம்மொழி மட்டுமல்ல, உயர்தனிச் செம்மொழி என்று முதன் முதலாக ஆதாரத்துடன் ஆய்வு செய்து வெளியிட்டவர், மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் ஆதரவு பெற்ற பரிதிமாற்கலைஞர் ஆவார். அழுத்தமான தமிழ்ப் பற்றின் காரணமாக "சூரிய நாராயண சாஸ்திரி" என்ற தன் வட மொழிப் பெயரை "பரிதிமாற் கலைஞர்" என்று பைந்தமிழில் மாற்றிக் கொண்டவர். மேலும் முதன் முதலாக "தமிழ் மொழி வரலாறு" படைத்த சிறப்பும் உடைய பெரும்புலவரே பரிதிமாற்கலைஞர்.

மேலும் சென்னைப் பல்கலைக்கழத்திலிருந்தே தமிழ்ப்பாடத்தை அகற்ற, வெள்ளை அரசு திட்டமிட்டபோது, அதைத் தடுத்து நிறுத்திய பெருமை, பாண்டித்துரைத் தேவர் அமைத்த மதுரை நான்காம் தமிழ்ச் சங்கத்தையே சாரும்! மதுரைத் தமிழ்ச்சங்கம் மூலம் உயர்தனிச் செம்மொழியாம் தமிழ், சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து இருக்க உரிய தீர்மானம் நிறைவேற்றப் பாடுபட்டவர் பரிதிமாற்கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

"தமிழ்ச் செம்மொழி" என்று அன்றே மதுரைத் தமிழ்ச்சங்கம் மூலம் ஆய்வு செய்து பரிதிமாற் கலைஞர் வெளியிட ஆதாரமாக, ஆதரவாக விளங்கிய பாண்டித்துரைத் தேவரும், பாஸ்கரசேதுபதியும் நன்றியுடன் போற்றத்தக்கவர்கள். ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து சுதேசி கப்பல் ஓட்டிய வ.உ.சியின் சுதேசி கப்பல் நிறுவனத்துக்கு நிதி உதவி வழங்கிய பாண்டித்துரைத் தேவர் பின்னர் அந்த நிறுவனத்தின் தலைவராகவும் பொறுப்பேற்றார்.

சிவஞானபுரம் முருகன் காவடிச் சிந்து, சிவஞான சுவாமிகள் பேரில் இரட்டை மணிமாலை, இராஜ இராஜேஸ்வரி பதிகம், தனிப்பாடல்கள் உள்ளிட்டவற்றை இயற்றியுள்ளார் பாண்டித்துரைத் தேவர். தமிழுக்குத் தொண்டு செய்வோர் சாவதில்லை. செத்தாலும் கூட செந்தமிழாய் பூப்பார்கள். அப்பூக்களில் ஒருவர் பாண்டித்துரைத் தேவர்.


நன்றி: தமிழ்மணி (தினமணி)

.

.