கற்கை நன்றே! கற்கை நன்றே! பிச்சை புகினும் கற்கை நன்றே!!

Thursday 11 November, 2010

குடி - ஜெயமோகன்

நண்பர் ஜீவானந்தம் அவர்கள் தமிழ்நாட்டின் சுற்றூச்சூழல் இயக்கங்களின் முன்னோடிகளில் ஒருவர். முப்பதுவருடங்களுக்கும் மேலாக தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் சார்ந்த கருத்துக்களை பரப்புவதற்கும் சுற்றுச்சூழல் அமைப்புகளை உருவாக்குவதற்கும் கடுமையாக உழைத்துவருபவர். அதற்கும் மேல் அவர் ஒரு மருத்துவர். மயக்கவியல் நிபுணர். நலம்தா மருத்துவமனை என்ற பேரில் மதுஅடிமை மீட்பகம் ஒன்றை ஈரோட்டில் நடத்திவருகிறார்.


அவரது மருத்துவமனையில் அமர்ந்து அவரிடம் நான் நிறைய உரையாடியதுண்டு. ஒருமுறை ஒரு லாரி ஓட்டுநர் வந்து குடியை நிறுத்தியபின்புள்ள வாழ்க்கையைப்பற்றி பேசிக்கொண்டிருந்துவிட்டுச் சென்றார். அவரது மனைவி மிக நெகிழ்ந்த நிலையில் டாக்டருக்கு நன்றி சொன்னாள். அவ்வாறு வந்துபேசுவது என்பது குடியை நிறுத்துவதில் மிக முக்கியமானது. அந்த உறுதிப்பாட்டை நீடிக்கச்செய்யும் ஒரு முயற்சி அது.


அவர் போனபின் டாக்டர் சொன்னார், ‘அவரைக் கவனித்தீர்களா , கையில் உயர்தர வாட்ச் அணிந்திருக்கிறார்.நல்ல சட்டை. மனைவி கழுத்தில் தங்கச்சங்கிலி. குடியை நிறுத்தி ஒருவருடம் ஆகவில்லை. பொருளாதார நிலை பலமடங்கு மேம்பட்டிருக்கிறது”. ”எப்படி?” என்றேன் ஆச்சரியமாக.


குடிப்பவர்களின் குடும்பங்கள் மிகமிகக் குறைவான வருவாயில் வாழக்கற்றுக் கொண்டிருக்கின்றன…என்றார் டாக்டர். தினம் முந்நூறு ரூபாய் சம்பாதிப்பவர் ஐம்பது ரூபாய்கூட குடும்பத்துக்குக் கொடுப்பதில்லை. அந்த சிறு தொகையில் அனைத்துத்தேவைகளையும் ஒடுக்கிக் கொண்டு அந்த குழந்தைகளை மனைவி வளர்க்கிறாள். சட்டென்று குடியை குடும்பத்தலைவர் விடும்போது கிட்டத்தட்ட முக்கால்பங்கு சம்பளம் மிச்சமாகிவிடுகிறது. சிலநாட்களிலேயே குடும்பம் மேலேறிவிடுகிறது.

'

'

குடி ஒரு பண்பாட்டு அம்சமோ ஒரு வாழ்க்கைமுறையோ கேளிக்கையோ ஒன்றுமல்ல, அது ஒருவகை நோய் மட்டுமே. நோயாக மட்டுமே அதைக் கண்டு அதற்கு சிகிழ்ச்சை அளித்து குணப்படுத்துவதே தேவையான செயலாகும். பெரும்பாலான குடிகாரர்கள் விளையாட்டாக நண்பர்களுடன் சேர்ந்து குடிக்க ஆரம்பிக்கிறார்கள். சட்டென்று உடல் அதற்குப் பழகிவிடுகிறது. அந்தப்பழக்கம் மெல்ல அடிமைப்படுத்துகிறது. அந்த பழக்கத்தை நியாயப்படுத்த ஆயிரம் காரணங்களைக் கண்டுபிடிக்கிறார்கள் மனிதர்கள். உடல்உளைச்சல் முதல் குடும்பப் பிரச்சினைகள் வரை. அந்த நியாயங்களுக்குள் சென்று விவாதிப்பதில் பொருளே இல்லை. நோயை குணப்படுத்துவதே தேவை

'

'

இந்தியா போன்ற வெப்பமண்டல நாட்டில் குடியின் பாதிப்பு மிகமிக அதிகம். பெரும்பாலும் வறுமைவாய்ப்பட்டவர்கள் வாழும் நம் நாட்டில் குடியினால் உழைப்பு குறைகிறது. உடல்நலம் குறைகிறது. விளைவாக குடும்பத்தில் பொருளியல் இழப்புகள் ஏற்படுகின்றன. இந்தியாவில் நூற்றுக்குத் தொண்ணூறு சதவீதம்பேர் மனைவிகுழந்தைகளை பட்டினி போட்டுத்தான் குடிக்கமுடியும்.

குடியை ஒரு நோயாக எண்ணமுடிந்தால் அதை சிகிழ்ச்சை செய்து குணப்படுத்துவது எளிது. ஆனால் சிகிழ்ச்சை பெறுபவர்களில் மீண்டும் குடிக்குத் திரும்பாமல் இருப்பவர்கள் கால்வாசிப் பேர்தான் என்றார் டாக்டர். ஏனென்றால் குடியை நாடுபவர்களில் பலர் குடிசார்ந்து ஓர் உலகை உருவாக்கி வைத்திருப்பார்கள். நெடுங்காலம் வேறு எதிலும் அவர்களுக்கு ஆர்வமே இருப்பதில்லை. சட்டென்று குடியை நிறுத்தும்போது ஒரு வெற்றிடம் உருவாகி வருகிறது. அந்த வெற்றிடத்தை அவர்கள் வேறுசெயல்பாடுகள் மூலம் நிரப்பிக்கொள்ளாவிட்டால் குடி அதை மீண்டும் கைப்பற்றும்.


தமிழ்நாட்டில் குடி ஒரு பெரும் சமூகச்சிக்கலாக நெடுங்காலம் முதலே இருந்து வருகிறது. தெருவில் கள்ளுண்டு பிதற்றும் குடிமகன்களை நாம் மணிமேகலையிலேயே காண்கிறோம். ஏழை மக்கள்தான் எப்போதும் குடிக்கு அடிமைகள். அவர்களின் அடிமைத்தனத்துக்கு குடியே காரணமாக இருக்கிறது.
'
'

நாகர்கோயில் கார்மல் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நிழல் உலக நிதர்சனம்என்ற பேரில் 2006 டிசம்பர் 7,8,9 தேதிகளில் ஜெயபதி அடிகள் முயற்சியால் நடத்தப்பட்ட கருத்தரங்கு இத்துறையில் ஒரு முக்கியமான முயற்சி. குடிகுறித்த பண்பாட்டுத்தகவல்களை தொகுப்பதற்கும் அதைப்பற்றிய ஓர் உரையாடலைத் தொடங்கி வைப்பதற்கும் இது முகாந்தரமாக அமைந்தது. அந்த அரங்கில் மூன்று நாட்களில் ஆறு அமர்வுகளிலாக 24 கட்டுரைகள் முன்வைக்கப்பட்டன. அவற்றை தொகுத்து குடிபோதை:புனைவுகள் தெளிவுகள்என்ற பேரில் ஒரு நூலாக ஆக்கியிருக்கிறார்கள் முனைவர் அ.கா.பெருமாள் மற்றும் சின்னச்சாமி.


இந்த நூல் குடிக்கு எதிரான ஒரு பிரச்சார நூல் அல்ல. குடிகுறித்த பலகோணங்களிலான ஒரு விவாதநூலே. இந்நூலில் உள்ள குடியும் குடிசார்ந்த எண்ணங்களும்என்ற நாஞ்சில்நாடனின் புகழ்பெற்ற கட்டுரை உண்மையில் அளவோடு குடிப்பது நல்லது என்றே வாதிடுகிறது. நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்றுஎன்று அது குடியை வர்ணிக்கிறது. குடி என்பது அறப்பிரச்சினை அல்ல, ஒழுக்கப்பிரச்சினை மட்டுமே. ஒழுக்கம் சார்புநிலைகொண்டது என்று வாதிடுகிறார் நாஞ்சில்நாடன்.

'
'
பிரான்ஸிஸ் ஜெயபதி அவர்களின் கட்டுரை மருத்துவ நோக்கில் குடி என்பது எப்படி ஒரு நோயாகவே கருதப்படுகிறது என்பதை மிக விரிவாக ஆராய்கிறது. கடற்கரைச் சமூகத்தில் 65 சதவீதம் ஆண்கள் குடிகாரர்கள் அவர்களில் 40 சதவீதம்பேர் குடியடிமைகள் என்று சொல்கிறார் ·பிரான்ஸிஸ் ஜெயபதி.

டார்டர் என்னும் ஆங்கில மருத்துவர் 1880ல் இரு பெரும் நூல்களை எழுதினார். நியூயார்க்கைச்சேர்ந்த டாக்டர் சில்க்வர்த் [William Duncan Silkworth]என்பவரும் குடி ஒரு நோய்தான் என்று வாதிட்டார். அவரால் குணமான பில் வில்சன் என்பவரே பின்னர் குடிக்கு எதிரான ஆல்ககாலிக் ஆனானிமஸ் என்னும் அமைப்பை உருவக்கினார்



குடி ஓர் அறப்பிரச்சினை அல்ல. ஒழுக்கக்கேள்வி அல்ல. புலனடக்கம் சார்ந்தது அல்ல. குடிகாரர் உண்மையில் ஒரு நோயாளி. அவருக்கு தேவை அறிவுரையோ புறக்கணிப்போ அல்ல. பிற நோய்களைப்போல அதற்கும் மருத்துவ உதவிதான் தேவை என்றார்கள் இவர்கள். மெல்ல மெல்ல அமெரிக்க மருத்துவக் கௌன்ஸில் இந்த வாதத்தை ஏற்றுக்கொண்டது. குடியை ஒரு நோயாக நிர்ணயம் செய்வதற்கான விதிகளை அது இரண்டாண்டுக்கால விவாதத்துக்குப் பின் உருவாக்கிக்கொண்டது.

'

'
பலவருடங்கள் கழித்துக்கூட குணமான குடிநோயாளி மீண்டும் திரும்பிவிடக்கூடும். ஆகவே தொடர்ச்சியான கண்காணிப்புடன் விரிவான பண்பாட்டு மாற்று அமைப்பும் அதற்கு தேவையாகிறது. மொத்தத்தில் குடியை நிறுத்துவது என்பது எளிய செயலல்ல என்று சொல்லும் பிரான்ஸிஸ் ஜெயபதி குடிக்கு எதிரான மனத்தடையை சமூகம் உருவாக்கி குடியை தொடங்காமல் இருக்கச்செய்வதே சிறந்த வழி என்கிறார்.
'
'

காந்திய சிந்தனையில் குடி குறித்த கருத்துக்கள் எப்படி உருவாயின என்பதை காந்தியவாதியான தே.வேலப்பனின் கட்டுரை விரிவாகச் சொல்கிறது. காந்தி குடிக்கு எதிரான தன் தீவிரமான கருத்துக்களை மதத்தின் ஒழுக்கவியலில் இருந்து பெற்றுக்கொண்டவரல்ல. அவர் ஓர் நடைமுறைவாதி. குடி எப்படி உடலையும் மனதையும் அடிமைப்படுத்துகிறது என்ற நேரடி அனுபவங்கள் மூலமே அவர் தன் எண்ணங்களை அடைந்தார்.

பாட்டர்சன் என்ற ஆஸ்திரேலியப் பொறியியலாளர் குடி அடிமையாக இருந்து காந்தியால் மீட்கபப்ட்டார். ஆனால் சிலவருடங்கள் கழித்து ‘;நான் மீண்டும் மதுவசமானேன் என்று காந்திக்கு எழுதிவிட்டு மீண்டும் குடிகாரர் ஆனார். காந்திக்கு குடியின் வல்லமையைக் காட்டிய நிகழ்வு அது. குடியில் உள்ள பொருளியல் சுரண்டலை காந்தி நன்கறிந்திருந்தார். கள்ளுக்கடை ஆங்கில அரசின் மையமான சுரண்டல்களில் ஒன்று என்று உணர்ந்தபின்னரே அவர் அதற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தார்




குடிபோதை:புனைவுகள் தெளிவுகள்தொகுப்பாசிரியர்கள் அ.கா.பெருமாள், சின்னச்சாமி. தமிழினி வெளியீடு.


லிங்க்: http://www.jeyamohan.in/?p=2215




Tuesday 6 April, 2010

குடிப்பழக்கம் - தேவைதானா?

மது (ஆல்கஹால்):

ஆல்கஹால் அல்லது சாராயம் சாதாரணமாக மக்களால் உட்கொள்ளப்படும் போதைப்பொருட்களில் ஒன்று. இது பெரும்பாலான சமுதாயங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் எளிதில் கிடைக்கக் கூடியதுமாகும். ஆல்கஹால் பல்வேறு விதங்களில் தொழிற்துறையில் பயன்படுத்தப்படுகிறது. மனிதர்களால் போதைப்பொருளாகக் குடிக்கப்படுவது (ஈதல் ஆல்கஹால்) எனும் வகையாகும். இது தெளிந்த, நீர்த்த நிலையில் உள்ள ஒருவித எரியும் சுவையுடன் கூடிய திரவம். புளிக்க வைத்தல் மற்றும் காய்ச்சி வடிகட்டும் முறைகளில் இது தயாரிக்கப்படுகிறது.

குடிநோய் (ஆல்கஹாலிசம்) :

குடிநோய் என்பது தீவிரமான தொடர்ந்த உடல் மற்றும் மன பாதிப்பை ஏற்படுத்தி, இறுதியில் மரணத்திற்கு வழிவகுக்கும் நோயாகும். அதன் முக்கிய அடையாளங்கள்.

1. குடிப்பதற்கான அடக்க முடியாத தீவிர வேட்கை எப்போதும் இருப்பது.

2. கட்டுப்பாடின்மை, குடிக்க ஆரம்பித்த உடன் நிறுத்த முடியாமல் மேலும் மேலும் குடிப்பது.

3. உடல் பாதிப்புகள், குமட்டல், வியர்வைப் பெருக்கம், நடுக்கம், தேவையற்ற பரபரப்பு போன்ற விலகல் அடையாளங்கள், குடிப்பதை நிறுத்தினால் ஏற்படுவது.

4. மேலும் மேலும் அதிகமாகக் குடித்தால் மட்டுமே போதை ஏற்படுவது.


குடிப்பழக்கத்தின் அபாயம்:

இந்தியாவில் மரணத்தை விளைவிக்கும் முக்கிய காரணங்களில் குடிநோயும் ஒன்று. நம் நாட்டில் உள்ள மனநல சிகிச்சை மையங்களில் சேர்க்கப்படும் குடிதொடர்பான பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போவதைப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. இளம் பருவத்தினரிடையே, முக்கியமாக மாணவர்களிடையே குடிப்பழக்கம் பெருகிவருவது கவலையளிப்பதாக உள்ளது. போதை காரணமாக ஏற்படும் பல்வேறு உடல் பாதிப்புக்கள், படிப்பில் ஆர்வமின்மை போன்றவை இதன் உடனடி விளைவுகள். இது இளைஞர்களின் முன்னேற்றத்திற்குப் பெரும் தடையாக அமைந்துவிடுவதால் பல குடும்பங்களும் சமுதாயமும் வெகுவாகப் பாதிப்படைகின்றன.


ஒருவருக்கு குடிநோய் இருப்பதை எவ்வாறு அறியலாம்...?

பின்வரும் நான்கு கேள்விகளில் ஒன்றுக்கேனும் உங்கள் பதில் “ஆம்” என்றிருந்தால், நீங்களோ அல்லது சம்பந்தப்பட்டவரோ குடிநோயின் ஆதிக்கத்திற்குட்படும் வருகிறீர்கள் என்றறியலாம்.

1. நீங்கள் எப்போதாவது குடிப்பழக்கத்தைக் குறைக்க வேண்டும் என்று எண்ணியதுண்டா...?

2. உங்களது குடிப்பழக்கத்தின் காரணமாக மற்றவர்கள் உங்களை விமர்சித்து அதனால் நீங்கள் கோபமடைந்ததுண்டா?

3. நீங்கள் எப்போதாவது குடிப்பது தவறு என்று எண்ணி அதனால் குற்றவுணர்வு அடைந்ததுண்டோ?

4. நீங்கள் காலையில் எழுந்த உடன் முதல் காரியமாக உங்கள் நடுக்கத்தைக் குறைக்கவோ முந்தைய தினம் குடித்ததன் விளைவை அகற்றவோ குடிப்பதுண்டா...?

இந்நிலையில் உடனடியாக இந்தக் கொடிய அடிமைப் பழக்கத்திலிருந்து விடுபட இதற்கென உள்ள மையங்களில் உள்ள மருத்துவர்களைச் சந்தித்தல் அவசியம். அவர்கள் உங்களுக்குத் தக்க ஆலோசனைகளையும் செயற்திட்டத்தையும் அளித்து உங்களை மீட்பது உறுதி.


மக்கள் ஏன் குடிக்கிறார்கள்...?

சிறிதளவு மதுவை உட்கொள்ளும் போது ஏற்படும் பின்வரும் “குறுகியகால விளைவுகள்” மக்களை வெகுவாக ஈர்த்துவிடுவதால் குடிப்பதை விரும்புகின்றனர்.

1. மன இறுக்கம் அகன்று ஒருவித தசைத்தளர்ச்சி ஏற்படுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

2. சுணக்கத்தை அகற்றி சுதந்திரமாக இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றது.

3. பசி உண்டாகிறது.

4. வேதனை தரும் விஷயங்களை மறக்க உதவுகிறது.

இவையனைத்தும் அப்போதைக்கு மட்டுமே என்பதை அறியத் தவறிவிடுகின்றனர்.


குடிப்பது தொடர்பாக மக்களிடையே பரவலாக இருந்துவரும் “தவறான கருத்துக்கள்” :

1. தினசரி சிறிதளவு மது அருந்துவது நல்லதும் பாதுகாப்பானதும் ஆகும். இந்த சிறிதளவு என்பது வரையறுக்கப்படாத ஒரு அளவு.

2. ஆல்கஹாலை அருந்தியவர் மாமிச உணவை உட்கொண்டு விட்டால் எந்த வித உடல் பாதிப்பும் ஏற்படாது.

3. பீர் மற்றும் திராட்சை மது உடலுக்குத் தீங்கு விளைவிக்காது.

4. சிறிதளவு ஆல்கஹால் உடலுக்கு நல்லது.

5. ஆல்கஹால் பாலியல் உறவை மேலும் இன்பகரமானதாக ஆக்கும்.

6. குடிப்பதால் ஒருவர் தனது மனச்சோர்விலிருந்து விடுபட முடியும்.

7. குடித்துவிட்டால் மற்றவர்களுடன் நட்புடனும் தயக்கமின்றியும் பழகமுடியும்.

8. குடித்தால் இரவில் நன்கு உறக்கம் வரும்.

9. அலுவலக நேரங்களில் குடிப்பதால் நன்கு வேலை செய்ய முடியும்.

10. மன அழுத்தம் மற்றும் கவலைகள் காரணமாக ஏற்படும் பரபரப்பை அகற்றும்.

11. ஜலதோஷம் மற்றும் இருமலை, விக்ஸ் களிம்பு போன்று போக்கிவிடும்.

12. குடிப்பதால் மனத்திடமும் தைரியமும் ஏற்படும்.

13. தீவிர உடலுழைப்பில் ஈடுபடுவர்களுக்குத் தேவையான சக்தியை அளிக்கும்.

14. உடற்களைப்பைப் போக்கும்.

15. பிரசவித்த பெண்களுக்கு நல்லது.

16. உணவிற்கு முன்பு குடிப்பது பசியைத் தூண்டும்.

17. குடித்தால் மசாலா சேர்த்த மாமிச உணவு மேலும் ருசியுடையதாக இருக்கும்.

18. நண்பர்களை வருத்தமடையச் செய்வதைக் காட்டிலும் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க குடிப்பதே மேல்.

மேற்சொன்னவை எல்லாம் மனித மனதின் தவறான கற்பிதங்களேயன்றி வேறில்லை..


ஒருவன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டான் என்பதற்கான எச்சரிக்கை அறிகுறிகள் :

1. உடல் ஆரோக்கியம் நலிவடைதல் சிவப்பேறிய கண்கள், சருமம், வெளிறிய தோற்றம், எடை மாற்றங்கள் போன்றவை.

2. உடலில் ஒருவித துர்நாற்றம்.

3. பள்ளிக்குச் செல்லாமை, படிப்பதில் ஆர்வமின்மை, பள்ளி வேலைகளை சரிவர செய்யாதிருப்பது, கடைநிலைக்குச் சென்றுவிடுவது.

4. வீடுகளில் கூறப்படும் புத்திமதிகள் பள்ளி வீதிகள் ஆகியவற்றை எதிர்ப்புணர்வுடன் மீறத் தலைப்படுவது.

5. பள்ளி மற்றும் வீட்டருகே தகாத செயல்களில் ஈடுபடுவது.

6. காரணமின்றி பள்ளி மற்றும் வேலைக்குச் செல்லாமல் திரிவது.

7. வழக்கமான நண்பர்களை விட்டகலுதல்

8. புதிய நண்பர்களைப் பற்றி ரகசியமாக வைத்திருப்பது.

9. வீட்டு விவகாரங்களிலிருந்து விலகியிருப்பது, தனது செயல்களை யாருமறியாது ரகசியமாகச் செய்வது.

10. எதிலும் ஈடுபாடு குறைவு: சோர்வாகவும் வழக்கத்திற்கு அதிகமாக தூங்கிக் கொண்டும் இருப்பது.

11. உடல் சுத்தத்தில் கவனமின்மை. சரியாக தினசரி குளிக்காமலும் அழுக்கமான ஆடைகளைத் தொடர்ந்து அணிந்தும் இருப்பது.

12. இரவில் தாமதமாக வருதல். அதற்கு பல கட்டுக் கதைகளைக் கூறுதல்.

13. வீட்டில் யாருடனும் பேசாமல் இருப்பது அல்லது தவிர்ப்பது.

14. பணம் காணாமல் போவது, தனது சொந்த உடமைகளை விற்று விடுவது

15. கடைகளில் திருடுவது.


குடிநோயின் உச்சம்:

1. மிகவும் அதிகமாகக் குடிப்பது.

2. ஒரே மூச்சில் குடிப்பது.

3. கடுமையான நடத்தை கோபப்பட்டு கண்டபடி கத்துவது, சண்டையிடுவது.

4. எரிச்சலூட்டும் நடத்தை தூக்கமின்மை, உணவை உட்கொள்ளாமல் இருப்பது.

5. குடிப்பதை நிறுத்த முயற்சித்தாலும் தோல்வியடைதல்

6. திடீரென மாறும் மனநிலை.

7. இடையறாது குடித்தல்

8. தனிமையில் குடித்தல்

9. ஏற்க முடியாத காரணங்களைக் கூறி மேலும் குடித்தல்.

10. மயங்கி விழும்வரை குடிப்பது.

11. உடல் பிரச்னைகள் அதிகரிப்பது

12. முற்றிலுமாக மறந்து போதல்

13. மது பாட்டில்களை பிறர் அறியாவண்ணம் மறைத்துப் பாதுகாத்தல்.

14. மன எழுச்சி, குடும்பம் மற்றும் நிதிப் பிரச்சனைகள்

மேற்கூறியவற்றில் சில பிரச்னைகள் இருந்தாலே குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டதை அறிய வேண்டும்.


குடிப்பதற்கு ஆரம்பித்து குடிநோயாளியாக மாறுவதற்குகிடையில் உள்ள நிலைகள்:

1. சோதித்துப் பார்க்கும் நிலை...

ஆல்கஹாலை உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகளை அறிய ஆவலால் சிலர் குடித்துப் பார்க்க முயல்கின்றனர்.

2. சமூக நிகழ்ச்சிகள் நிலை...

நண்பர்களைச் சந்திப்பது விருந்துக் கூட்டங்கள் போன்ற சமூக நிகழ்ச்சிகளின் போது மது அருந்துவது.

3. சார்பு நிலை...

குடிக்காமல் இருக்க முடியாது எனும் நிலை. தொடர்ந்து தனியாகக் குடிக்கும் நிலை.

4. தீவிரமடைந்த நிலை

குடிப்பவர் எப்போதும் உடல் மற்றும் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார். மேலும், குடித்தால் மட்டுமே இதிலிருந்து தப்ப முடியும் எனக் கருதுகிறார்.


ஆல்கஹால் ஒரு போதைப் பொருளா...?

இதில் சந்தேகத்திற்கிடமே இல்லை. ஆல்கஹால் குடித்தவுடன் விரைவிலேயே ரத்த ஓட்டத்தில் கலந்துவிடுவதால் மூளைக்கும் செல்கிறது. இதன் விளைவே போதை எனப்படும் இயல்பான நடவடிக்கைகளிலிருந்து ஏற்படும் மாற்றங்கள், ஆல்கஹால் ஊக்கமழித்துச் சோர்வை ஏற்படுத்தும் போதை மருந்தாகும்.


நன்றி: மீனாட்சி மருத்துவ மலர்
.
.

Friday 26 March, 2010

மண்வாசனையும் பாரதிராஜாவும் (மகேந்திரன்)


சிலபேருக்கு மட்டும் அவர்களின் பெயருகேற்ற மாதிரி அவர்களின் குணச்சிறப்பும் சாதனையும் ஒன்று போல அமைந்து விடுகிறது. பிற்காலத் தமிழ் சினிமாவில் புதிய களம் கண்டு மாபெரும் வெற்றிவாகை சூடிய ராஜாதான் பாரதிராஜா..

16 வயதினிலே படம் வெளிவரும்வரை சினிமா ஸ்டுடியோக்களில் வரையப்பட்டிருந்த கிராமங்களைத் தான் நம்மால் பார்க்க முடிந்தது. 16 வயதினிலே வந்த பிறகே நிஜகிராமங்களையும், அந்த மக்களையும், அந்த மண்ணின் வாசனையையும் நம்மால் நேருக்குநேர் பார்க்க முடிந்தது. அந்தக் கிராமங்களில் வாழும் ஒருவராக நம்மை நினைத்துக் கொண்டு அவரது திரைப்படங்களைப் பார்த்து மகிழ முடிந்தது. தமிழ்ச் சினிமாவில் பாரதிராஜாவின் வருகைக்குப் பிறகு, தமிழ்த் திரைப்பட உலகமே கிராமங்களை நோக்கி ஓடத் தொடங்கியது. கிராமங்களுக்கு நம்மை அழைத்துச் சென்றது மட்டும் பாரதியின் சாதனை என்று நினைக்க முடியாமல், கதை சொல்லும் நேர்த்தியிலும் புதுமை படைத்தவர் பாரதி. புதுவிதமான திரைக்கதை, நடிகர் தேர்வு, பாடல் எடுக்கும் அழகிய பாங்கு, கதாப்பாத்திரங்களின் யதார்த்தமான பேச்சு, நடைமுறை வாழ்க்கை, அதன் அழகு மொத்தத்தில் தமிழ் சினிமாவை மண்வாசனையுடன் தலை நிமிர வைத்தது இயக்குநர் பாரதிராஜாதான்.

அவர் இயக்குநராக அறிமுகமான 16 வயதினிலே படத்தில் கதாநாயகனை அதுவும் கமலஹாசனை சப்பாணியாக நடிக்க வைத்து, சினிமா ஹீரோ இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அதுவரை இருந்த சினிமா சம்பிரதாயத்தை உடைத்தெறிந்த முதல் இயக்குநரும் பாரதிதான்.

பாரதி, தனது முதல் படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் ஒரு புதிய நதியை ஓட வைத்திட அந்த நதியில் தான் இன்றுவரை எத்தனை இயக்குநர்கள் படகோட்டி வருகிறார்கள்!

கதாநாயகன் என்றால் ஆணழகனாக இருக்க வேண்டும், கட்டுமஸ்தான உடல்வாகு கொண்டவனாய் இருக்க வேண்டும் என்ற வறட்சியான தத்துவத்தையெல்லாம் போட்டு நொறுக்கிப் பொசுக்கியவர் இந்த பாரதி. அவர் இயக்கிய படங்களில் எல்லாம் அவரும் எதிர்பாராத புதுமுகங்களை படத்தின் முக்கிய கேரக்டர்களுக்கு அறிமுகப்படுத்தினார். பிறகு, அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர் நடிகைகள் அனைவரும் தமிழ் சினிமாவில் உச்சகட்டப் புகழைப் பெற்று பிரபலமானார்கள்.

இந்திய சினிமாவிலேயே தனது திரைப்படங்களின் மூலம் கணக்கற்ற புதுமுகங்களை அறிமுகப்படுத்தி வெற்றி பெற்று சாதனை படைத்த ஒரே இயக்குநர் பாரதிராஜாதான் என்று நினைக்கிறேன். பாரதிராஜாவின் ஒரு படத்தில் நடித்தாலே போதும் தனது எதிர்காலம் ஒளிமயமாகி விடும் என்று ஏங்கி நிற்கும் கூட்டம் இன்றும் காத்துக் கொண்டு நிற்கிறது.

அவரது இன்னொரு மாபெரும் சாதனை, அவருடைய உதவியாளர்கள் அனைவரும் இன்று பிரபலமான இயக்குநர்களாக இருக்கிறார்கள். அடுத்த கட்டமாக அவர்களுடைய உதவியாளர்களும் இன்று இயக்குநர்கள், நடிகர்களாகி விட்டார்கள். உதாரணத்திற்கு பாரதிராஜாவின் உதவியாளர்களான பாகியராஜ், மணிவண்ணன் இருவருமே புகழ்பெற்ற இயக்குநர்களாகவும் நடிகர்களாகவும் இருக்கிறார்கள். பாக்யராஜ் அவர்களிடம் உதவியாளர்களாய் இருந்த பார்த்திபன் போன்றவர்கள் நடிகர்கள், இயக்குநர்களாகி விட்டார்கள்.

பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டு முன்னணி நடிகர், நடிகை களானவர்களை தமிழ்நாடே அறியுமென்பதால் அந்த நீ..ள..மான பட்டியலை இங்கே நான் எழுதவில்லை.

பாரதிராஜா படமென்றாலே, புதுமைகளுக்கு பஞ்சம் இருக்காது.. மண்வாசனைக்குத் தட்டுப்பாடு இருக்காது.. மனக்களிப்பிற்குத் தடையிருக்காது என்று மக்கள் ஒரு கல்வெட்டையே உருவாக்கிவிட்டார்கள்.

முதல்மரியாதை படத்தை நான் எத்தனை முறை பார்த்திருக்கிறேன், நடிகர் திலகத்தின் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரம் அதைக்கொண்டு பாரதி கதைப் போக்கு இன்றும் பிரமிக்க வைக்கிறது.

நான் கதை வசனகர்த்தாவாக இருந்தபோது, பாரதி உதவி இயக்குநராக இருந்தார். அப்போதிருந்தே நாங்கள் நண்பர்கள். ஆனால் 16 வயதினிலே வரும்வரை அந்த நண்பனிடம் இப்படியொரு அமானுஷ்யத் திறமை இருந்ததை நான் அறியவில்லை. இன்றும் அனது அருமை நண்பனாகத் திகழும் பாரதிராஜா, கர்வம் இல்லாத வெற்றியாளன். திரைஉலகில் என்றுமே களைத்துச் சளைக்காத ஒரு அபூர்வப் போராளி இந்த பாரதிராஜா!

எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடிய உண்மைக் கலைஞன். பாரதிராஜாவுக்குப் பின், தமிழ் சினிமாவில் இயக்குநராகும் ஆசையில் சென்னைக்கு ஓடிவந்தவர்கள் ஏராளம்.. இயக்குநர் ஆகும் ஆசையை இளைஞர்களிடத்தில் உண்டாக்கிய இயக்குநர் பாரதிராஜா!

பரதிராஜாவின் பாதிப்பால் பலரும் பல இடங்களில் இருந்து புறப்பட்டு வந்து இயக்குநர்கள் ஆனார்கள். அவர்களின் பெயரில் கட்டாயமாக பாரதி என்பதும் ராஜா என்பதும் இரண்டில் ஒன்று நிச்சயம் இடம் பெறும். அந்த அளவிற்குப் புதிய இயக்குநர்களை வசீகரித்தவர் பாரதிராஜா..

இன்றுவரை பாரதிராஜா என்ற அற்புதக்கலைஞன் மண்வாசனை கொண்ட படங்களைத் தருவதில் தனக்கு நிகர் யாரும் இல்லை என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

பாரதிராஜாவிற்கு தமிழ் சினிமாவும், தமிழர் கலாச்சாரமும், தமிழர்களின் பெருமையும் என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறது.

-இயக்குநர் மகேந்திரன்

புத்தகம்: சினிமாவும் நானும்

தயாரிப்பு & வெளியீடு:
மித்ர ஆர்ட்ஸ் & கிரியேஷன்ஸ்
32/9 ஆற்காடு சாலை, கோடம்பாக்கம்
சென்னை-24

.
.